முகாநூளில் தொடர

சனி

செஞ்சிக் கோட்டை






செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சி விஜய நகர அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில் செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது. விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529) நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம் பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர் என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி கிருஷ்ணப்பர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக் கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார். இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம் கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர்களாக இருந்தனர்.

இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர் டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம் செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம் வெங்கடன் செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம் கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள் செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை பாதுஷா பாத் என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல் மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது. சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி சுல்பிகர்கானின் நீண்ட முற்றுகைக்குப்பின் செஞ்சி மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான் சொரூப்சிங் என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின் ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.

சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார். இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார். அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார். இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார். ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆர்க்காட்டு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு அருகில் உண்டாக்கினார்.

கி.பி. 1750இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சுத் தளபதி செஞ்சியைக் கைப்பற்றினார். 1750முதல் 1761வரை செஞ்சிக் கோட்டை பிரெஞ்சுக்காரர் வசம் இருந்தது. 1761இல் ஸ்டீபன் சுமித் என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப் பட்டது. 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியைப் பிடித்தார். ஆனால், மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர் வசம் வந்தது. இதன்பின் செஞ்சிக்கோட்டை அதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது. இன்று செஞ்சிக் கோட்டை ஒரு தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது.
கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண வடிவில் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள இக்கோட்டை கீழ்க்கோட்டை (Lower Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும் பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்கோட்டையினுள் நுழைய ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில், பாண்டிச்சேரி வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன.

திசைகளை வைத்துப் பார்ப்பின் கிருஷ்ணகிரிக் கோட்டை வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும், சந்த்ரயன் துர்க்கம் தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின் உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது. இம்மூன்றில் இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உயரம் 235 மீட்டர் ஆகும்.

கிருஷ்ணகிரி மலைக்கோட்டை

செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில் லையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது. மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு பெரிய தானியக் களஞ்சியங்களைக் காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும் இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.

இராஜகிரி மலைக்கோட்டை

செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம் சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில் பட்டாபி ராமர் கோவில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள் மராத்தியக் கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண மண்டபம் உள்ளது. 7 அடுக்குகளைக்கொண்ட இக்கட்டடம் மரத்தைப் பயன்படுத்தாது கட்டப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தை அடுத்து வெடிமருந்துச்சாலை, பெரிய தானியக் களஞ்சியம், வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை, வெங்கட ரமணா கோயில் ஆகியவை உள்ளன. வெங்கடரமணா கோவிலின் வேலைப்பாடுமிகுந்த ஒற்றைக் கற்றூண்கள் சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இராஜகிரி மலைக்கோட்டையில் 9 வாயில்கள் உள்ளன. எட்டாவது வாயிலுக்குள் நுழையுமிடத்தில் மரப்பாலம் ஒன்று உள்ளது. உச்சியில் நாணயச்சாலை, தெய்வமில்லாத ரெங்க நாதர் கோவில், இராஜா தேசிங்கு ‘தர்பார்’ மண்டபம், மணிக் கூண்டு ஆகியவற்றைக் காணலாம்.

இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை (Inner Fort) உள்ளது. இக்கோட்டைப் பகுதியில் புதுச்சேரி வாயில், வேலூர் வாயில் ஆகியவை உள்ளன. புதுச்சேரி வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயிலருகிலுள்ள கோட்டைச் சுவரில், ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாகான் கி.பி. 1713இல் தேசிங்குராஜனை வீழ்த்தி இக்கோட்டையைப் பிடித்த வெற்றிச் செய்தியைக் குறிக்கும் ‘பாரசீக மொழிக் கல்வெட்டு’ உள்ளது.

இராஜகிரி மலைக்கோட்டைக்குத் தெற்கில் சந்த்ரயன் துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.

தமிழ்நாட்டில் செஞ்சி கோட்டையைப்போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்னமாகும்.

புதன்

தெய்வ புலவர் திருவள்ளுவர்


ஒன்றரையடி குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும் , கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.

திருவள்ளுவர் சிலை
உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக
ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் . யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் வாசுகி அம்மையார்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர் கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தனது கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் தனது கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில் தான் கேட்டு தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்பு இருவரும் பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது மனைவி வாசுகியிடம் "சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு" என்றார்.

நாமாக இருந்தால் " பழைய சாதம் எப்படி சுடும் " என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.

ஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார். இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை,தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.

வாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.

இந்த உலகிற்கே தனது குறள் வரியின் மூலம் பலம் சேர்த்தவர்

" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு "

என்ற குறள் மூலம் அறிவுரை வழங்கிய தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.

இந்த குறளின் பொருள் என்னவெனில் " நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை" என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ]ய்

என் தூங்கும் என்கண் இரவு"

- என்று அவரின் பிரிவை நினைத்து நாலுவரி பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில்
" அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே ! என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே ! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ! " என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

எவ்வளவு அருமையான இல்லறத்தை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.

இன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால் கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில் விவாகரத்து என்ற பெயரில் புதைத்து விடுகின்றோம். இது தேவையா?

"மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்" - குறள்-52

வள்ளுவர்,வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி
குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரம்! ஈகியர் முற்றமாய் தமிழகத்தில் உருவெடுப்பு..!



முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உவாகிறது ஈகியர் மு
ற்றம்.

தமிழர்களை அழித்து தமிழர் வாழ்விடங்களை தம்வசப் படுத்தி எக்காளமிடும் சிங்களப் பேரினவாதம் ஈழமண்ணில் தமிழர்களின் அடையாளத்தை அகற்றி தவறான வரலாற்றை சித்தரிக்க முனையும் இவ்வேளையில் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் நீண்ட கால தமிழீழ ஆதரவாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த அர்ப்பணிப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் முன்னெடுத்துவந்த விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகளை நல்கி வந்தவருமான பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தான் வாழும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவலம் தோய்ந்த வாழ்வை அழியாத் தடமாய் ஒரு வரலாற்றுப் படைப்பாய் உருவாக்கி வருகிறார்.

தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுவரும் இவ் ஈகியர் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரங்கள் மட்டுமன்றி அக் கொடிய போரில் இருந்து ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தம்மையே தீயிற்கு இரயாக்கிய தியாகிகளின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழன் இன்று அதே கல்லிடூடாக உலகிற்கு தமிழர்களின் புதிய செய்தியை சொல்லுகின்றான்.உலகின் மாபெரும் அதிசயமாக அருங்காட்சியகமாக வரலாற்றுப் பொக்கிசமாக விளங்கப் போகும் இவ் ஈகியர் முற்றம் மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகளால் உருவாக்கம் பெற்று வருகிறது.

இதனை உருவாக்கும் பழ.நெடுமாறன் ஐயா அவர்களூக்கும்இ சிற்பிகளுக்கும் என்றும் உலகத் தமிழினம் தலைவணங்கி நன்றி சொல்லும்.

சுதந்திர தினம்


சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெருவெல்லாம் கொண்டாடியது போய் இப்போது பள்ளிகளுக்குள்ளும் அரசு அலுவலகங்களுக்குள்ளும் நடைபெறும் ஒரு சம்பிரதாய விழாவாக மாறிவிட்டது.

"இந்திய நாட்டின் தந்தை' என்று போற்றப்ப
டும் காந்தியே சுதந்திர தினத்தைக் கொண்டாடவில்லை, நாம் ஏன் கொண்டாட வேண்டும்?' என்று சிலர் கேட்கிறார்கள்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது நம்முடைய தன்மான உணர்வு, சுயகெüரவம், பெருமை என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவில்லை. உணர மறுக்கிறோம்.

சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் வடிவமைத்து, மக்களைத் திரட்டி சுதந்திரம் என்ற உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றாரே காந்தியடிகள், அவர் அந்த முதல் சுதந்திர தின விழாவின்போது என்ன செய்து கொண்டிருந்தார், எங்கிருந்தார் என்பதைப் பற்றிய சில வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வரலாற்றுப் பின்னணி: 1946-லேயே வங்காளம் கலவர பூமியாக மாறிவிட்டிருந்தது. அதற்கான சரித்திரப் பின்னணி தெரிந்தால்தான் இந்து - முஸ்லிம் உறவு, பாகிஸ்தான் பிரிவினை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

1946-ல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டிஷ் அரசு, அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. அது "அமைச்சர்களின் தூதுக்குழு' என்றழைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லியின் முயற்சியின் பலனாக இக்குழு உருவானது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் ஒப்படைக்கும் வழிமுறைகளையும், சுதந்திர இந்தியா எத்தகைய ஆட்சிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று முடிவு செய்யவும் இக்குழுவை அமைப்பதாக அட்லி கூறினார்.

முக்கிய இந்தியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் மற்றும் அனைத்து இந்தியப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இக்குழு இந்தியா வந்தது.

இதில் இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்திக் லாரன்ஸ் பிரபு, வர்த்தக வாரியத்தின் தலைவர் சர் ஸ்டாஃபர்ட் கிரிப்ஸ், கடற்படை முதன்மைத் தளபதி ஏ.வி. அலெக்ஸôண்டர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தூதுக்குழு உறுப்பினர்கள் இருவகைத் திட்டங்களை 1946 மே, ஜூன் மாதங்களில் முன்வைத்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஒரு மத்திய அரசு உருவானது.

இரண்டாவது திட்டத்தில் பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தபடி பாகிஸ்தான் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை விரைவுபடுத்திச் செயல்படுத்த முஸ்லிம் லீக் திட்டமிட்டது.

அதன்படி முஸ்லிம் லீகின் தலைவரான முகமது அலி ஜின்னா ஆகஸ்ட் 16, 1946-ஆம் நாளை "டைரக்ட் ஆக்ஷன் டே' (நேரடி நடவடிக்கை தினம்) என்று அறிவித்து விட்டார்.

அப்போது வங்காளத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் முதல்வர்தான் சாஹித் சுரவர்த்தி.

வெறுப்பு, நெருப்பாய் பற்றியது: வங்காளத்திலும் அதனைத் தொடர்ந்து பிகாரிலும் கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் மிருகத்தனமாக வேட்டையாடிக் கொன்று குவித்தனர்.

சராசரி இந்தியர்களின் மனதே பதறியபோது, அகிம்சையும் அன்புமே வாழ்வின் ஆதாரமாக வேண்டும் என்று கூறிய காந்தியடிகளின் மனது பதறாதா?

தன்னுடைய வாழ்வின் கடைசி சோதனைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார் காந்தியடிகள். கூட்டமாய் அல்ல, தன்னந்தனி மனிதராய் தன்னுடைய உதவியாளர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றார் - வங்காளத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அல்ல, தைரியத்தைக் கொடுப்பதற்காக.

126 நாள்கள் (அக்டோபர் 29, 1946 முதல் மார்ச் 3, 1947 வரை) எந்த இந்தியத் தலைவரும் சென்றுவராத இடங்களுக்கெல்லாம் இரவு பகலாய், காலில் செருப்பின்றி நடந்தே சென்றார்.

அவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அரசாங்கம் அஞ்சியது. ஆனால் ""என்னுடைய உயிர் ஆண்டவன் கையில்தான் உள்ளது'' என்று கூறிவிட்டார் காந்தியடிகள்.

இந்த நவகாளி யாத்திரைக்குப் பின்னர்தான் அமைதி திரும்பியது.

கலவரத்தைக் கட்டுக்குள் வைத்து அரசாங்கத்தைத் தனிநாடு கோரிக்கைக்கு இணங்க வைத்துவிடலாம் என்று எண்ணிய அரசியல்வாதிகளின் கணக்கு தப்பாகிவிட்டது. அன்றைய முதல்வராக இருந்த சுரவர்த்தியே அதற்கு சாட்சி.

இந்தப் பின்னணியில்தான் கசப்பான இந்தியப் பிரிவினை நடக்கிறது. ஏற்கெனவே ரணமாகிப் போயிருந்த வங்காளத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. கல்கத்தா நகரம் தீப்பிடித்து எரிகிறது. 1946-ல் முதல்வராய் இருந்து கலவரத்துக்குத் துணைபோன சாஹித் சுரவர்த்தி தற்போது செய்வதறியாது காந்தியடிகளின் துணையை நாடி நின்றார்.

காந்தியடிகளின் அகிம்சைக்கு ஒரு சவால்: 9 ஆகஸ்ட், 1947 முதல் 7 செப்டம்பர், 1947 வரை 30 நாள்கள் கல்கத்தாவில் தங்கி அமைதிப்பணி ஆற்றினார் காந்தியடிகள். பாலியாகட்டாவில் உள்ள ஹைதரி மன்ஸில் என்னும் (முஸ்லிம்) வீட்டில் தங்கியிருந்தார். சுரவர்த்தியும் உடனிருந்தார்.

ஆகஸ்ட் 14 படுக்கைக்குப் போவதற்கு இரவு 11 மணி ஆகிவிடுகிறது. கலக்கத்தோடு காணப்பட்டார். விடியற்காலை வழக்கத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே காலை 2 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார்.

ஆகஸ்ட் 15, காந்தியடிகளின் நிழலாக இருந்து மகனாய் மலர்ந்த மகாதேவ் தேசாயின் நினைவு நாள். ஆகவே, அன்று உண்ணாவிரதமும் நூற்பும் செய்வது வழக்கம். அன்றும் அதையே செய்ய முடிவு செய்தார்.

சில முஸ்லிம்கள் இந்தச் சுதந்திரம் வரக் காரணமாக இருந்த காந்தியடிகளைப் பார்த்த பின்புதான் தங்களுடைய நோன்பை முடிப்போம் என்று காத்திருந்தார்கள். அதில் இந்துக்களும் இருந்தார்கள்.

அவர்கள் காந்தியடிகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போதே சாந்திநிகேதன் குழந்தைகள் தங்களுடைய இனிமையான குரலால் கவி தாகூரின் சுதந்திரப் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தார்கள்.

பிரார்த்தனைக்கு இடையூறு இல்லாமல் தங்களுடைய பாடலை நிறுத்திக்கொண்டு பிரார்த்தனை முடிந்தவுடன் தொடர்ந்து பாடினார்கள்.

அமைச்சர்களுக்கு ஆலோசனை: காலையில் மேற்கு வங்க அமைச்சர்கள் காந்தியிடம் ஆசி வாங்க வந்தார்கள். அவர்களிடம், ""இன்றிலிருந்து நீங்கள் முள் கிரீடத்தை அணிந்துகொள்ளப் போகிறீர்கள். உண்மையையும் அகிம்சையையும் வளர்த்தெடுக்க சளைக்காமல் பாடுபடுங்கள். பொறுமையோடும் பணிவோடும் இருங்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி உங்களுக்குக் கொடுத்த சோதனைகள் உங்களுக்கு மன உறுதியையும் தைரியத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனிமேல்தான் அதனை மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்கப் போகிறார்கள். அதிகாரத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அதிகாரம் உங்களின் நேர்மையைச் சிதைத்துவிடும். அதனுடைய பகட்டிலும் ஆரவாரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

இந்திய கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்காகத்தான் இந்தப் பதவியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு உதவி செய்வாராக'' என்று பேசினார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து காந்தியடிகளைச் சந்தித்து, ""எல்லாமே நம் கைமீறிப் போய்விட்ட நிலையில் நாங்கள் என்ன செய்வது?'' என்று ஆலோசனை கேட்டார்கள்.

வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மறைந்த தோழர் ஜோதிபாசுவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பூபேஷ் குப்தாவும்!

""இதுபோன்ற சிக்கலான நேரங்களில் பெரிய பெரிய கூட்டங்கள், பேரணி எல்லாம் நடத்துவது இயலாது. ஆகவே நம்மால் முடிந்த அளவு சிறு சிறு கூட்டங்கள் நடத்தலாம்.

இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம். யாராக இருந்தாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நாடு, மதத்தின் பெயரால் சிதறுண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?'' என்றார் காந்தியடிகள்.

அன்றைய வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி வந்து காந்தியடிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக குறிப்புகள் உள்ளன. ஆனால், கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய நூலில் 16-ஆம் தேதி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வ சமயப் பிரார்த்தனையின் அற்புதம்: மாலையில் ராஷ் பெகன் மைதானத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 30,000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள்.

"இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்', "இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக' என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, காந்தியடிகளுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் வரவேற்பு கொடுத்தார்கள்.

பிரார்த்தனைக்குப்பின் காந்தியடிகள் உரையாற்றினார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகக் கூடி பிரார்த்தனையில் கலந்து கொண்டதற்கு கல்கத்தா மக்களைப் பாராட்டினார்.

""இந்துக்கள் எந்த மாதிரியான கோஷங்களைக் கூறுகின்றார்களோ அதே கோஷங்களை முஸ்லிம்களும் கூறுகிறார்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மூவர்ணக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களும் பறக்கவிடுகிறார்கள். கல்கத்தாவின் இந்த மனநிலை மற்ற பகுதிகளுக்கும் பரவி அங்கும் அமைதி நிலவட்டும்'' என்று நிறைவான செய்தியைக் கூறினார் காந்தியடிகள்.

லண்டனில் உள்ள அகதா ஹேரிசன் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தில், ""பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு நன்றி சொல்வதுதான் இன்றைய தினம் போன்ற மிகச் சிறந்த நிகழ்வை நான் கொண்டாடும் வழி'' என்று எழுதினார்.

அன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் பார்க்க உடன் இருந்தவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார் காந்தி. தான் எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. பயத்திலும் சோகத்திலும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட அவர் மனது விரும்பவில்லை.

ஆனால் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தது அவருக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இரவில் கல்கத்தா நகரின் பிற பகுதிகளுக்குச் சென்று பார்க்கிறார். மக்கள் உற்சாகத்தோடு சென்றுவருவதைப் பார்த்து அவருடைய மனது நெகிழ்ச்சியடைகிறது.

ஆதலால்தான் அடுத்த நாள் ஹரிஜன் பத்திரிக்கைக்கு அவர் எழுதிய தலையங்கத்திற்குத் தலைப்பிடும்போது ""அற்புதமா அல்லது விபத்தா?'' என்று கல்கத்தாவில் அமைதி திரும்பியதைப்பற்றி உருக்கமாக எழுதுகின்றார்.

""இந்துக்கள் மசூதிகளுக்கும் முஸ்லிம்கள் கோவில்களுக்கும் உற்சாகமாகச் சென்று வருகின்றார்கள். வெறும் நடிப்பாக இல்லாமல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து இவை வெளிப்பட்டிருந்தால் கிலாபத் இயக்கக் காலங்களைவிடச் சிறந்த நிலை இது என்றுதான் சொல்லவேண்டும்'' என்று எழுதியுள்ளார்.

அமைதி வீரனாய் காந்தி: அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு, காந்தியடிகளை "தனிமனித ராணுவப்படை' என்று கூறி பிரமிப்பு அடைந்தார். 50,000 ராணுவ வீரர்களால் மேற்கு இந்தியாவில் ஏற்படுத்த முடியாத அமைதியைத் தனி மனிதராக இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்படுத்தினார் காந்தி என்று புகழ்ந்து கூறினார்.

""கல்கத்தாவில் அற்புதம்'' என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் காந்தியடிகளோ, ""இந்தப் பணி இறைவனின் திருப்பணி; அவர் இட்ட பணி என் மூலமாகவும் சுரவர்த்தி போன்றோர் மூலமாகவும் இறைவன் செய்து முடிக்கின்றார்'' என்றார்.

சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் டெல்லியில் இல்லை. முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. செங்கோட்டையில் தேசியக்கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறந்தபோது அதைக்காண அவர் அங்கில்லை. தன்னோடு இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமரும் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.

அதற்குக் காரணம் அதைவிட ஒரு முக்கியமான இறைப்பணி காந்திக்காகக் காத்திருந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே அமைதியை ஏற்படுத்தி இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட ரணத்தை ஆற்றும் முயற்சியில் இறங்கியிருந்தார் அவர்.

எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினார்.

ஒற்றுமையாக, அமைதியாக, அன்போடு கொண்டாட வேண்டும் என்றே எண்ணினார். நம்முடைய இந்தியச் சமுதாயம் நாகரிகமான சமுதாயம் என்பதை உலகுக்கு உணர்த்த சமூக நீதியுடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு அனைத்துத் தரப்பு மக்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுதான் காந்திக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

ரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அதிவேக தொடருந்தில்/ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய செய்தி.
இதை தொடர்ந்து திடீரென்று ரயிலில் தீப்பிடிக்க காரணம் என்ன
 என்று ஆராய்ந்ததில் சில பேர்,தொடருந்தில் உள்ள மின்னேற்றம் செய்யும் சொருகியில்/குதையில் இருந்து பயங்கரமான வெடி சத்தம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறனர்.
கீழ் தட்டு மக்களில் இருந்து மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல பேர் கையடக்க தொலைபேசிகளை சரியான பயன்பாட்டுடன் இயக்குவதில்லை.
இன்னும் சொல்ல போனால் கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை பயன்படுத்தும் விதிமுறைகளை யாரும் சரிவர பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் இருக்கும்.
இதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் அனைவருக்கும், கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில டிப்ஸ்கள். கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
ஆனால் நிறைய பேர் கையடக்க தொலைபேசி சார்ஜரில் போட்டுவிட்டும், கையடக்க தொலைபேசில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
கையடக்க தொலைபேசி முழுமையாக மின்னேறிவிட்டது என்று சில கையடக்க தொலைபேசிகளில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை கையடக்க தொலைபேசில் பார்த்த உடன் மின்னேற்றிஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.
ஒவ்வொரு கையடக்க தொலைபேசிக்கும், எத்தனை மணி நேரம் மின்னேற்றி செய்ய வேண்டும் என்று சில வரம்புகள் உள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிலர் இரவில் மின்னேற்றிஜில் போட்ட கையடக்க தொலைபேசி காலையில் தான் எடுப்பார்கள். இது மிக ஆபாயத்தை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால் மொபைல் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
சரியான கையடக்க தொலைபேசி மின்னேற்றி பயன்படுத்துவது அவசியமாகிறது. தனது கையடக்க தொலைபேசி மாடலுக்கு பொருந்தாத மின்னேற்றி கூட பொருத்தி பார்த்து சோதனை செய்கின்றனர். இப்படி கையடக்க தொலைபேசிக்கு பொருந்தாத மின்னேற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு கையடக்க தொலைபேசின் மின்னேற்றி வேரொரு கையடக்க தொலைபேசியில் கலட்டி போட்டு சிலர் சார்ஜ் செய்வதையும் நாம் அன்றாட வாழ்க்கைகளில் பார்க்கிறோம். இது போல் ஒரு கையடக்க தொலைபேசின் பேட்டரியினை, வேறொரு பேட்டரியில் போட்டு சார்ஜ் செய்வதும் தவறு.
பொதுவாக ஒரு பேட்டரி, வேறொரு கையடக்க தொலைபேசியில் பொருந்தாது. ஆனால் சில கையடக்க தொலைபேசிகள் சார்ஜாக வாய்ப்பிருக்கிறது. இப்படி சார்ஜாகும் போது வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை சரியாக செய்யாது போனால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்ப்பது மிக நல்லது.

இளம் மென்பொருள் பொறியாளர்






சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர்.
12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் ‘கோ டைமென்ஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பம் சம்மந்தமான விஷயங்களில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு, சென்னையை சேர்ந்த ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்கள் பெரிய உதாரணம் என்று கூறலாம்.
சைமென்டெக் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணி புரியும் இவரது தந்தை, தொழில் நுட்பம சம்மந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சகாப்தமான ஸ்டீவ் சாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் இவர்களுக்கு சிறந்த முன்மாதிரி என்று இந்த குட்டி தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சாதனை சகோதரர்கள் கோ டைமென்ஷன் என்ற தங்களது நிறுவனத்தினை நடத்தி வருவது மட்டும் அல்லாது, ஷர்வன் மற்றும் இவர்களது எதிர்கால கனவையும் கூறியிருக்கின்றனர்.
‘கோ ஷீட்’ என்ற தங்களது டேப்லட்டை சொந்தமாக தயாரித்து வெற்றிகரமாக வெளியிட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
கோ டெமென்ஷன் என்றாலே எல்லை கடந்து எல்லா திசைகளிலும் செல்வது என்ற புதிய இலக்கணம் சொல்லும் ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்களின் வெற்றியும் எல்லை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.

செவ்வாய்

காக்கியும் சில கையூட்டு உண்மைகளும்!




சென்னையின் பரபரப்பான இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் நாள் ஒன்றின் 'மேல்’ வருமானமே இரண்டு, மூன்று லட்சங்களைத் தொடும். மற்ற நகரங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு லட்சத்துக்குக் குறையாது. தமிழகம் முழுக்க அப்படி வசூலில் பட்டை கிளப்பும் சில பேட்டைகள் இங்கே...

வணிக நிறுவனங்கள் மற்றும் 'அண்டர்கிரவுண்ட் பஜார்’கள் காரணமாக சென்னையில் பூ மணக்கும் ஸ்டேஷனும் யானையே


கவிழ்ந்த ஸ்டேஷனும் வருமானத்தில் நம்பர் ஒன்.


காஞ்சிபுரத்தில் 'கூடு வா’ என்று அழைக்கும் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் தொழிலும் களைகட்டுவதால், அடிபிடி வருமானம். மதுரை யில் 'இந்த’க் காவல் நிலையத்துக்கு மட்டும் 'திடீர் திடீர்’ என யோகம் அடிக்கும். ஸ்டார் ஹோட்டல்கள், மது பார்கள், பேருந்து நிலையம் ஆகியவையே காரணம். நெல்லையில் காற்றாலை தொழில் கொடிக் கட்டிப் பறக்கும் 'மான்’ காவல் நிலையத்தில் கொட்டுது பணம். சேலத்தில் 'பள்ளத்து’ ஸ்டேஷன், பெரிய மாரியம்மன் லிமிட்டில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்கு வசூலில் செம டஃப் கொடுக் கிறது. கோவையில் ரெண்டு எழுத்து மேட்டில் உள்ள ஸ்டேஷன் காவலர்களின் பாக்கெட்டில் ஐந்நூறுக்குக் குறைந்து கரன்ஸியைப் பார்க்க முடியாது. திருப்பூரில் வடக்கு பார்த்த திசைக்குத்தான் மவுசு அதிகம்.

காவல் நிலையங்களைப் பொறுத்தவரை யார், எவராக இருந்தாலும் காசேதான் கடவுளடா!


தமிழக அரசியல் களத்தையே மிகச் சமீபத்தில் உலுக்கிய கொலை வழக்கு அது. இப்போது வழக்கு விசாரணை இன்னொரு பிரிவு போலீஸாரிடம் சென்றுவிட்டது. ஒருவேளை சி.பி.ஐ-க்கு வழக்கு செல்வதாக இருந்தால், தடயம், துப்பு, சாட்சி என எதையும் விட்டுவைக்கக் கூடாது என்று மேலிடத்தில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.


தென் மாவட்டத்தின் அதிமுக்கிய கனிம நிறுவன உரிமையாளரின் மகன் மீது மூன்று கிடுக்கிப்பிடி வழக்குகளைப் பாய்ச்சத் தயாரானது போலீஸ். நேர்மையான அதிகாரி ஒருவர் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்த போதுதான் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஊரை விட்டுக் கிளம்பிய மறுநாளே, அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். இதற்குக் கனிம அதிபர் செலவு செய்தது ஒன்றேகால் கோடி!


தமிழக முதல்வரே கடுமையாக அர்ச்சித்த அந்தத் தென் மாவட்டப் புள்ளி, தற்போது மதுரை டு தொண்டி வரையிலான 80 கோடி மதிப்பு சாலை ஒப்பந்தப் பணிகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்காக போலீஸ் மற்றும் ஆளும் கட்சியினருக்கு மட்டும் அவர் வாரி இறைத்தது திட்ட மதிப்புத் தொகையில் 10 சதவிகிதமாம்.


இன்றைய தேதியில் அந்தச் சாமியார் தமிழக போலீஸாருக்குப் பணம் காய்க்கும் மரம். கடந்த மாதம் சாமியாரின் தென் மாவட்ட ஆசிரமம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாமியாரின் சிஷ்யர்கள் வீசிய செருப்பு பெண் போலீஸார் மீது விழுந்தது. அதற்காக சாமியார் மீது வழக்கு போடாமல் இருக்க கைமாற்றப்பட்ட தொகை 17 லட்சமாம். அதற்கு முன் மிக நெருக்கடியான நேரத்தில் சாமியார் வெளிமாநிலத்தில் இருந்து தென் மாவட்டம் வந்தார். அப்போது அவரது லைனுக்கு வந்த தென் மாவட்ட போலீஸார், 'வெளிமாநில போலீஸார் உங்களைக் கைதுசெய்ய அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களைத் திசை திருப்பி அனுப்பலாமா அல்லதுஉங்களை பேக் செய்து அவர்களிடம் அனுப்பலமா?’ என்று கேட்டு இருக்கிறார்கள். வெலவெலத்துப் போன சாமி, உடனடியாக தனது காரில் இருந்த பெட்டியில் இருந்து 10 லட்சத்தை 'ஹாட் கேஷாக’க் கொடுத்து அனுப்பினாராம். பிறகு, தலைமறைவாகப் பயணித்துத் தன் இருப்பிடம் சேர்ந் ததும்தான் அவருக்குத் தெரிந்ததாம், வெளி மாநில போலீஸ் யாரும் தன்னைக் கைது செய்ய வரவில்லை என்று. உலகத்துக்கே உட்டாலக்கடி வித்தை காட்டியவருக்கே டேக்கா கொடுத்தது அந்த 'ரணகள பூமி’யைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும்.

-டி.எல்.சஞ்சீவிகுமார்

ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்தவிகடன், 01-08-12

http://www.vikatan.com/article.php?aid=22036#cmt241

பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன

13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர
் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜி முதல் முறையாக எம்.பி. ஆனபோது அவரைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்த அவரது அக்காள், பிரணாப் பங்களாவுக்கு சற்று தூரே தெரிந்த ராஷ்டிரபதி பவனைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவாராம். நீயும் ஒரு நாளைக்கு அங்கு போய் அமருவியா என்று கேட்பாராம். இப்போது அவரது கனவு நிறைவேறி விட்டது.
குடியரசுத் தலைவராகியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இனி பல்வேறு சலுகைகள், வசதிகள் கிடைக்கும். அவருடைய மாதச் சம்பளம் ரூ.1.50 லட்சமாகும். அவர் குடியேறப் போகும் ராஷ்டிரபதி பவன் மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய வீடுகளில் இதுவும் ஒன்று.
பிரணாப் முகர்ஜியைக் கவனித்துக் கொள்வதற்காக ராஷ்டிரபதி பவனில் 200 பணியாளர்கள் காத்துள்ளனர்.
ராஷ்டிரபதி பவன் தவிர சிம்லா, ஹைதராபாத்தில் குடியரசுத் தலைவருக்காக சிறப்பு ஓய்வில்லங்கள் உள்ளன.
குடியரசுத் தலைவருக்கு அதி நவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார் தரப்படும். இந்தக் காரை பிரதீபா பாட்டீல் காலத்தில்தான் பெரும் விலை கொடுத்து வாங்கினர். இதன் மதிப்பு ரூ. 12 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பிரணாபுக்கு பல சலுகைகள் கிடைக்கும். அதாவது ஓய்வூதியமாக ரூ. 75,000 கிடைககும். இலவசத் தொலைபேசி வசதிகள், செல்போன் வசதியும் கிடைக்கும். அவர் விரும்பும் இடத்தில் மிகப் பெரிய வசதியுடன் கூடிய பங்களா தரப்படும். அங்கு வாடகை இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் அவர் வசிக்கலாம்.
தனிச் செயலாளர் கிடைக்கும், 5 பணியாளர்கள் தரப்படுவர். வேலையாட்களுக்கு வருடத்திற்கு ரூ. 60,000 சம்பளம் தரப்படும். கார் தரப்படும். இந்தியா முழுவதும் இலவசமாக ரயில், விமான பயணங்களை அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
இப்படிச் சலுகைகள் ஏகப்பட்டது

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.

ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.

ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!

அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.

இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.

அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.

ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம்.

போர் குறித்த ரஷ்ய இலக்கியங்கள் அனைத்துமே மகத்தானவை.முடிந்தால் வாசியுங்கள்.


 வரலாறு எப்பொழுதும் நமக்கு தவறாகவோ,ஒரு சார்பாகவோ,இருட்டடிப்பு செய்யப்பட்டோ தான் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.பள்ளி புத்தகங்களில் இருந்தே இது தான் நிலை.உதாரணமாக அமெரிக்ககாரன் அணுகுண்டு போடலைனா ரெண்டாம் உலகப் போர் முடிஞ்சு இருக்காது என்று தொடர்ந்து நம்ப வைக்கப்பட்டு வந்து உள்ளதை சொல்லலாம்.போரின் முடிவில் வீசிய அணுகுண்டை போரின் துவக்கத்திலேயே வீசி இருந்தால் இந்த போருக்கே அவசியம் இருந்து இருக்காதே என்று அப்பொழுது நமக்கு கேட்க தோணவில்லை.உண்மை அதுவல்ல.

 இரண்டாம் உலகப் போர் என்பது இரண்டு தத்துவங்களின் மோதல்.நாசிசம்/பாசிசம் இணைந்து கம்யூனிசத்தை ஒழித்துக் கட்ட துவக்கியதே இரண்டாம் உலகப் போர்.போரின் ஆரம்பத்தில் ஜெர்மனி,சோவியத்துடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டு இருந்தாலும் ஹிட்லர் திரும்ப திரும்ப சொல்லி வந்தது அனைத்து நாடுகளையும் வென்ற பின் நான் முழு பலத்துடன் சோவியத்தை நோக்கி திரும்புவேன் என்று தான்.ஹிட்லரின் குறி சோவியத் என்பதை நன்றாக உணர்ந்து தான் மேலை முதலாளித்துவ நாடுகள் போரின் துவக்கத்தில் அமைதி காத்தது.

 ஜூன் 1941 இல் துவங்கியது ஹிட்லரின் சோவியத் படையெடுப்பு.கிழக்கு போர் முனை என இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் பதியப்பட்டு வரும் இந்த போர்முனை தான் தோன்றிய நாள் முதல் உலகம் கண்டறிந்த மிகுந்த உக்கிரமான,வீரம் செறிந்த,மாபெரும் ராணுவ மோதலாகும்.உலகில் அதிக களப் பலி நிகழ்ந்த போரும் இதுவே.கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் மரணம் அடைந்த போர் முனை அது.அவர்களில் இரண்டு கோடி பேர் ரஷ்யர்கள்.ஹிட்லரின் படை மாஸ்கோ வரை முன்னேறி வந்து விட்ட போதும் இது நாள் வரையிலான போர்க்களங்கள் அறிந்திராத யுக்த்திகள் அனைத்தையும் சோவியத் செம்படை கைக்கொண்டது.பின் வாங்கி செல்லும் போது தங்களின் சொந்த நகரங்கள்,கிராமங்களை,வயல் வெளிகளை தாங்களே தீக்கிரையாக்கினர்.மக்களும் ஒத்துழைத்து வாழிடங்களை விட்டு காடுகளில் குடிபெயர்ந்தனர்.கைப்பற்றி உள் நுழையும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு நபர் கூட இல்லாததைக் கண்ட ஜெர்மன் ராணுவம் மிகுந்த சோர்வுக்கு ஆளானது.ஒவ்வொரு சோவியத் குடிமகனும் ராணுவத்திற்கு தன்னால் ஆன பங்களிப்பை செய்தான்.பெண்களின் பங்களிப்பு இன்னும் மகத்தானது.இரண்டு லட்சம் சோவியத் பெண்கள் நேரடியாக போர்முனையில் பங்கேற்றனர்.ஒரு வேலை உணவை மட்டுமே ஒட்டு மொத்த தேசமும் உண்ணக் கூடிய சூழ்நிலை.தலைநகர் மாஸ்கோ தீக்கிரையாக்கப்பட்ட போதும் ஜெர்மன் ராணுவம் நுழையாத உள்நாட்டு பகுதிகளின் ஒவ்வொரு வீடும் ஆயுத தொழில்சாலை ஆனது.சோவியத் போர் வீரர்கள் போரிட்டுக் கொண்டே இருக்க,தொழிலார்கள் உழைத்துக் கொண்டே இருந்தனர்.உச்சகட்டமாக ஸ்டாலின்கிராடில் நடந்த யுத்தமே இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு வித்திட்டது.ஸ்டாலின்க்ராடை ஹிட்லர் வெற்றி கண்டு இருந்தால் உலக வரலாறு மாறியிருக்கும். போரில் சோவியத் இழந்தது தனது 10% மக்கள் தொகையை.

சனி

அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!


இந்த தகவலைப் படிக்க ஐந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா ??? பிடித்திருந்தால் பெருமையாக SHARE செய்யுங்கள்

*'மீ*ட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர்களுக்கு மத்தியில் முதியோர், ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே
பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்
வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துலநின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்தரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

மறக்காமல் சொல்

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால் மட்டும் அ.. ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ... ஈ...
சூடு பட்டல் மட்டும் உ... ஊ...
அதட்டும் போது மட்டும் எ.. ஏ....
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ... ஓ...
வக்கனையின் போது மட்டும் ஔ.
விக்களின் போது மட்டும் ஃப்....
என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி தமிழ் மொழி என்று...

நம் தாய் மொழி தமிழ்



எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்றபோதும், எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது என்பதும் ஒரு குழப்பமனதுதான்.

சிறந்தது எது?

எது உன்னை கருவில் இருந்து வளர்த்ததோ,
எது உன் தேவையை பூர்த்தி செய்ததோ,
எது உன் தாயை மகிழ்வித்ததோ
எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ
எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).

உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் செய்வார்.

தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :

௧) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உன் தாய்மொழிலே பேசு (அந்நிய மொழி மோகம் கொள்ளாதே).
௨) முடிந்தால் தாய்மொழில் கவிதை, கதைகள் எழுத்து, இல்லையேல் கவிதை, கதைகளை படி.
௩) தாய்மொழியை பழிக்காதே.(மற்ற மொழியோடு ஒப்பிடாதே)
௪) மற்ற மொழிகளை படி, அவற்றில் நல்லதை உன் மொழி மக்களுக்கு சொல்லு.
௫) உன் செயலை வைத்தே உன் தாய்மொழி மதிக்க படுகிறதை நீ உணரு.

பாவம் ஈமுக்கள்!



'ஈமு கோழிப் பண்ணை வைத்தால் பணம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டும்' என்று பொதுமக்களை ஏமாற்றி பணத்தைச் சுருட்டிய கம்பெனிகள் இப்போது ஒவ்வொன்றாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளன. ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க... ஈமு கோழிகளை அம்போவென விட்டுவிட்டு ஓட்டமெடுத்துவிட்டனர் மோசடி பேர்வழிகள்.

தற்போது இந்த ஈமு கோழிகளுக்கு உணவிடுபவர்கள் யாருமில்லாததால்... அவையாவும் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு இறக்க ஆரம்பித்துள்ளன. இறந்து கிடக்கும் கோழிகளை மற்ற கோழிகள் உண்ணவும் ஆரம்பித்துள்ளன.

மோசடி பேர்வழிகள் நடத்திய நாடகத்தில் ஏதுமறியா இந்த கோழிகள் தற்போது இத்தகைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது... பாவத்திலும் பாவம்.

தமிழக கால்நடைத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பாவி கோழிகளை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றை பாதுகாக்க முன்வரவேண்டும்!

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.




இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!




இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!




இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.




பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.




பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!




இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.




இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!




இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது

.

வெள்ளி

எப்போது தீரும் வால்பாறை சோகம்?


கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்.
க. காளிதாசன்



சமீபத்தில் வால்பாறையில் மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து சிறுத்தைகளால் தாக்கப்பட்டு 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தேயிலைத் தோட்டங்களில் பனியிலும், மழையிலும் உழைத்துச் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் அவை. குழந்தைகளை இழந்த அந்த ஏழைப் பெற்றோர்களின் வலி சாதாரணமானதல்ல.


மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலை எடுத்துச் செல்லாமல் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கூடிப் போராட்டம் நடத்தினர். ஊழியர்களைச் சிறைப்பிடித்தனர். சிலர் அவர்களைத் தாக்கவும் முற்பட்டனர். "புலிகள் காப்பகம் என்று அறிவித்ததைத் திரும்பப் பெறவேண்டும்', "வால்பாறையை விட்டு வனத்துறை வெளியேற வேண்டும்', "விலங்குகளைக் கொல்வதற்கு உரிமை வேண்டும்' போன்ற முழக்கங்களை எழுப்பினர். அவர்களைச் சமாதானப்படுத்த வந்த சார்-ஆட்சியரிடம் தங்கள் கோபத்தைக் கொட்டினர். அவர்களின் கோபம் மிக நியாயமானது, ஆனால், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறினால் இப்பிரச்னை தீர்ந்து விடுமா?
இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றிய உண்மை நிலை அறிய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு அளித்த அறிக்கையில் காணப்பட்ட மகிழ்ச்சியான செய்தி, தமிழகக் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது என்பதுதான். அதன் விளைவாக ஆனைமலை, முதுமலை ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் புலிகள் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டன.


அதற்கு முன்பாக களக்காடு-முண்டந்துறை பகுதி மட்டுமே புலிகள் காப்பகமாக இருந்தது. இது நமது மாநில வனப்பாதுகாப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இயற்கை ஆர்வலர்கள் இதை மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கியபோது அப்பகுதி மக்களிடம் இதற்கு எதிரான கருத்து பரவத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக, வால்பாறையில் சிறுத்தைகளால் குழந்தைகள் மரணமடையும்போதெல்லாம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதாலேயே இச்சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் புலிகள் காப்பகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. மக்களிடம் பரப்பப்பட்ட சில தவறான தகவல்களே அதற்குக் காரணம்.


உண்மையில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் ஒதுக்கப்படும் பெரும் நிதி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்கே செலவிடப்பட உள்ளது. புலிகளைப் போன்றே சிறுத்தைகளும் காட்டில் தமக்கென எல்லை வகுத்துக்கொண்டு தனித்து வாழ்பவை. இணை சேருகிற காலம் தவிர, அவை தம் எல்லைக்குள் வேறு சிறுத்தையை அனுமதிக்காது. தாயிடமிருந்து பிரியும் ஒவ்வோர் இளம் சிறுத்தையும் தமக்கான புதிய வாழ்விடத்தை அமைத்தாக வேண்டும். அவற்றில் சில மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள காடுகளைத் தமது வாழ்விடமாக்கிக் கொள்கின்றன.

புலிகளைப் போன்று, பெரிய விலங்குகளை மட்டுமே உணவாக்கி சிறுத்தைகள் வாழ்வதில்லை. எல்லா சூழ்நிலையிலும் வாழும் தகவமைப்பு பெற்றவை. முயல், மந்தி, சருகுமான், முள்ளம்பன்றி போன்ற சிறு விலங்குகள் இருந்தாலே சிறுத்தைகள் பிழைத்துக்கொள்ளும். தேயிலைத் தோட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இச்சிறுவிலங்குகள் இருப்பதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அங்கு இருந்து கொண்டேயிருக்கும். அங்குள்ள சிறுத்தைகளைக் கவரும் மற்றொன்று வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள். சில நேரங்களில் நாய்களைத் தேடி அவை மனிதக் குடியிருப்புகளுக்கு வருகின்றன. கசாப்புகடைகளில் தூக்கி எறியப்படும் எஞ்சிய மாமிசக் கழிவுகளும் சிறுத்தைகளைக் கவர்ந்திழுப்பவை.
ஆனால், குழந்தைகள் கொல்லப்பட காரணம் என்ன? ஆய்வாளர்கள் இதை பல கோணங்களில் பார்க்கிறார்கள், குழந்தைகளைக் கொன்ற சிறுத்தைகளை மனித மாமிசம் உண்பவை என்று வரையறுக்க முடியாது. ஏனெனில், இச்சம்பவங்களில் குழந்தைகள் தாக்கப்பட்டு இறந்துள்ளனவே ஒழிய, சிறுத்தைகளால் உண்ணப்படவில்லை.
மேலும், மனிதர்களை உண்பவை எனில், அவை மனிதச் சுவைக்கு ஆட்பட்டு தொடர்ந்து மனிதர்களையே குறிவைத்துத் தாக்கும். அப்படி தொடர் சம்பவமாக இங்கு நிகழவில்லை.
தமது இரை விலங்குகளுக்கான பற்றாக்குறை இருப்பதால் அவை தாக்குகின்றன என்பதையும் ஆய்வுகள் மறுக்கின்றன. சமீபத்தில் அங்குள்ள இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் சிறுத்தைகளின் கழிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் முயல், முள்ளம்பன்றி, சருகுமான், கேளையாடு, கருமந்தி, கடமான் போன்றவையே அவற்றின் உணவாக இருப்பதை அறிந்துள்ளனர். இவ்விலங்குகள் அங்கு கணிசமாக காணப்படுகின்றன.
புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் இச்சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதும் தவறானதே. 2007-ல் தான் ஆனைமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், 1990-லிருந்து 2007-வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.


இங்கு நடந்த சோக நிகழ்வுகள் அனைத்தும் வெளிச்சம் குறைந்த மாலைப்பொழுதிலேயே நடந்துள்ளன என்பது இச்சம்பவங்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும். இவற்றில் பெரும்பாலும் குழந்தைகள் குனிந்த நிலையில் ஏதாவது செயலில் இருக்கும்போதே தாக்கப்பட்டுள்ளன. தனது இரை விலங்காகக் கருதியே குழந்தைகளைச் சிறுத்தைகள் தாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபோதும் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. பிடிபடும் சிறுத்தைகள் வேறு காடுகளில் விடப்படுகின்றன.


சமீபத்தில் அக் குழந்தை கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்தான் ஒரு சிறுத்தை கூண்டில் பிடிபட்டு வேறு காட்டில் விடப்பட்டது. இப்படி பிடிப்பதால் இப்பிரச்னை தீராது என்பதை மகாராஷ்டிரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஏனெனில், ஒரு சிறுத்தை அகற்றப்படும்போது அந்த இடத்தைத் தமதாக்கிக்கொண்டு அருகிலுள்ள காடுகளிலிருந்து வேறு சிறுத்தை அங்கு வந்துவிடும். எனவே சிறுத்தைகளே இங்கு இருக்கக் கூடாது என்பது நடைமுறை சாத்தியமற்றது.


ஆனால், நிகழ்வுகளைத் தவிர்க்க நாம் வேறு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். இச்சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதில் தேயிலைத்தோட்ட நிர்வாகத்துக்கும் முக்கிய பங்குண்டு. சிறுத்தைகளால் தாக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் பிரதான சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிக்கு போகும் குறுகிய வழித்தடங்களிலேயே நடைபெற்றுள்ளன. எனவே, குடியிருப்புகளுக்குப் போகும் பாதைகள் அகலமானதாகவும் இரவு நேரங்களில் மின் விளக்கின் வெளிச்சம் நிறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும்.


குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்கள் சிறுத்தைகள் பதுங்க வழிவகுக்கும். புதர்களை முற்றிலும் அழிக்க வேண்டும். எல்லா வீடுகளுக்கும் கழிவறைகள் அவசியமாகும். வீடுகளைச் சுற்றி போதிய தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பேருந்து வசதியற்ற பகுதிகளுக்கு அவ்வசதி செய்து தரப்பட வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த குடியிருப்பு வளாகங்களை வேறு இடத்தில் அமைத்துத் தரவேண்டும். வீடுகளில் நாய்கள் வளர்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுத்தைகளைக் கவரும் மாமிசக் கடைகளின் கழிவுகள் முறையாகப் புதைக்கப்பட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அங்குள்ள மருத்துவமனைகளிலும் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்பட வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக வெளிச்சம் மங்கிய மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் நடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடனே செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளைத் தனித்து நடக்க விடக்கூடாது. இதே ஆனைமலையில் டாப்சிலிப் போன்ற பகுதிகளில் அடர்ந்த காட்டின் நடுவே பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். அங்கும் குழந்தைகள் உண்டு. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. ஏனெனில், அம்மக்களிடம் உள்ள வனவிலங்குகளைப் பற்றிய எச்சரிக்கை உணர்வே காரணமாகும்.
வால்பாறை பகுதிகளில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக அறிய தானியங்கி கேமராக்கள் பொருத்தி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அச்சம் தவிர்க்க கூண்டுவைத்து பிடிக்கப்படும் சிறுத்தைகளை வேறு பகுதிகளில் விடும்போது அவற்றின் நடமாட்டத்தை அறியும் நவீன சாதனங்களைப் பொருத்திய பின்பே விட வேண்டும்.


வனவிலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படும்போது கூடும் மக்களிடம் சிக்கித் தவிப்பது அங்குள்ள வனத்துறையே. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் வனத்துறைக்கு எதிராக திரும்புகிறது. உயர் அதிகாரிகளைக் காட்டிலும் களப் பணியாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். யாரும் விலங்குகளின் தாக்குதலை நியாயப்படுத்துவதில்லை. ஆனால், வனத்துறையால் மட்டுமே எல்லாமும் செய்துவிட முடியாது.


வனப்பாதுகாப்பு, குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளை விரட்டுதல், வேட்டைத்தடுப்பு, தீ தடுப்பு போன்றவற்றில் இரவு பகலாகப் பணியாற்றும் களப் பணியாளர்களைக் குறிப்பாக மிகச் சொற்ப ஊதியத்தில் தாற்காலிகப் பணியிலிருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை இதில் குறை கூறுவதோ குற்றம் சாட்டுவதோ பொருத்தமாகாது. இது அவர்களை மீறிய சம்பவங்களாகும். காட்டு விலங்குகள் இல்லாமல் காடு இருக்க முடியாது. காடு இல்லாத நாடு செழிக்க வாய்ப்பில்லை. ஆனைமலை போன்ற அரிய வனப்பகுதிகள் இயற்கை நமக்களித்துள்ள விலைமதிக்க முடியாத சொத்து. எந்த வன விலங்கும் நகரங்களில் நம் வீடு தேடி வந்து நம்மைத் தாக்குவதில்லை.


வால்பாறை போன்ற அவற்றின் வாழ்விடத்தில் நடக்கும் இச்சம்பவங்களைத் தவிர்க்க நாமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு எவ்வளவு இழப்பீட்டுத்தொகை கொடுத்தாலும் இழப்பை ஈடுசெய்ய முடியாது. எல்லோரும் விரும்புவது இனி எந்தக் குழந்தையும் தாக்கப்படக் கூடாது என்பதையே. அதை வனத்துறையால் மட்டும் செய்து விட முடியாது. அரசின் எல்லா துறைகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் தங்கள் பகுதியிலிருந்து சிறுத்தைகளை முற்றிலும் அப்புறப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் வாழ வேண்டும்.

கட்டுரையாளர்: "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்.

மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஆரம்பம்....... மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆலோசனை .....



தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டால் என்ன? என்ற ஆழமான யோசனையில் முதல்வர் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகார மையத்தை வலம் வருபவர்கள்!''



''ஆச்சர்யமான அதிர்ச்சியாக இருக்கிறதே...''



'மயக்கம் என்ன?’ தொடர் பக்கங்களைப் புரட்டிய கழுகார், ''உம்மைப் போலத்தான் நானும் ஷாக் ஆனேன். மிகமிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறதாம் அந்த ஆலோசனைப் படலம். மதுக்கடைகளால் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம். இதன்மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக அந்த வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று வழி என்ன என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் தருமாறு தனக்கு நெருக்கமான சிலருக்கு அஸைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர்’ என்றும் சொல்கிறார்கள்!''



''இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுமே?''

''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால், மொத்தத் தொகுதிகளையும் அப்படியே அள்ளுவதற்கு ஆளும் கட்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதால் இதில் அரசியல் கணக்கும் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல் களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!''



''இன்று நேற்று அல்ல.... 40 ஆண்டுகளாக அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?''

''குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில், குஜராத்தில் தங்கும் வெளிநாட்டினர் மட்டும் தங்களது பாஸ்போர்ட்டைக் காண்பித்து ஒரு மாத காலத்துக்கான மது பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளலாம். குஜராத்தில் தங்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சில ஆவணங்களைக் காண்பித்து 'ஹெல்த்’ லைசென்ஸ் பெற்று மது அருந்தலாமாம். இப்படிச் சில சலுகைகள் தவிர, அங்கே குடிக்கு தடைதான். ஆனால், சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது நடப்பதும், அதைக் கண்டுபிடித்து தண்டிப்பதும் நடக்கத்தான் செய்கிறது. 'நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்குக் கடனாகவும் வழங்குகிறது. பூரண மதுவிலக்கு அமலில் இருக்கையில் இது எப்படி சாத்தியம்?’ என்பது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரிப் பாடம்தானே!''



''நம் முதல்வருக்கு நன்கு நெருக்கமானவர்தானே குஜராத் முதல்வர்?''

''குஜராத் நிர்வாகம் மிக ஒழுங்குடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதே இதற்கு மிகமுக்கியமான காரணம். மக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் முறைகேடான பண வசூலின்றி, குறித்த காலத்துக்குள் மாநில நிர்வாகம் செய்து கொடுப்பதால் மக்களும் அத்தனை வரிகளையும் முறையாக செலுத்தி விடுகிறார்கள். விற்பனை வரியில் ஆரம்பித்து அனைத்து ரக வரி வசூலும் துல்லியமாக நடைபெற்று அரசின் கஜானா நிரப்பப்படுகிறதாம். இலவசம் என்பதே மாநிலத்தின் நிர்வாகக் கொள்கையில் கிடையாதாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடையாது. ஆனால் விவசாயத்துக்குப் பயன்படும் மின்சாரத்துக்கான கட்டணம் மற்ற பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து ஒரு ரூபாய் குறைவு... இப்படி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன!''



''முதல்வரின் கனவு எப்போது நனவு ஆகுமாம்?''

''கிடைக்கும் உற்சாகத் தகவல்களை வைத்துத்தான் நல்ல நாள் பார்க்கப்படும். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் அது நடைமுறைக்கு வரலாம். ஒரு வேளை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அறிவிப்பாகக்கூட வரலாம். மாதங்கள் கடந்தாலும் முதல்வரின் யோசனை மதுபானக் கடைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக நிச்சயமாக இருக்கும்!'' என்றபடி அடுத்த சப்ஜெட் மாறினார் கழுகார்!



ஜூனியர் விகடன் - ஆகஸ்ட் 1 , 2012

கோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு ஏதிராக நடந்த போர் குற்றத்தை விசாரிக்கக் கோரியும், கைது செய்யப்பட்ட தமிழர்களை எந்த ஒரு நிபந்ததனயும் இல்லமல் விடுவிக்க கோரியும் லண்டன் ஸ்ட்ரட்ஃபொர்ட் இல் கோபி சிவந்தன் கடந்த இருபது நாட்காளாக உண்ணா விரத போரட்டதை மேற்கொண்டுள்ளார்.

மேலும் ஒரு பத்ரிகைக்கு அவர் கூறியதாவது "வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலங்கை ரானுவதினர் அடிமைகளை போல் நடத்துகின்றனர்" எனவும் "இந்த உண்ணா விஅரத போராட்த்தின் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இந்த போராட்டம்" என கூறியுள்ளார்.... கோபி சிவந்தனின் இந்த அகிம்சை போரட்டத்தை ஆதரியுங்கள், இந்த பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

நன்றி...


விடீயோ

ஞாயிறு

இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!





சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது, "என்ன செய்யலாம்...' என யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம் என நினைத்தேன்.

நான் படித்த மெக்கானிக்கல் படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ் வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், மாசு இல்லை; எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும்.

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!







இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்குஎந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிக்கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவக்கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!

உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா?

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு......
இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.