முகாநூளில் தொடர

வெள்ளி

மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஆரம்பம்....... மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஆலோசனை .....



தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டால் என்ன? என்ற ஆழமான யோசனையில் முதல்வர் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகார மையத்தை வலம் வருபவர்கள்!''



''ஆச்சர்யமான அதிர்ச்சியாக இருக்கிறதே...''



'மயக்கம் என்ன?’ தொடர் பக்கங்களைப் புரட்டிய கழுகார், ''உம்மைப் போலத்தான் நானும் ஷாக் ஆனேன். மிகமிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறதாம் அந்த ஆலோசனைப் படலம். மதுக்கடைகளால் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம். இதன்மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக அந்த வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று வழி என்ன என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் தருமாறு தனக்கு நெருக்கமான சிலருக்கு அஸைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர்’ என்றும் சொல்கிறார்கள்!''



''இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுமே?''

''நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால், மொத்தத் தொகுதிகளையும் அப்படியே அள்ளுவதற்கு ஆளும் கட்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதால் இதில் அரசியல் கணக்கும் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல் களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!''



''இன்று நேற்று அல்ல.... 40 ஆண்டுகளாக அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?''

''குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. ஆனால் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில், குஜராத்தில் தங்கும் வெளிநாட்டினர் மட்டும் தங்களது பாஸ்போர்ட்டைக் காண்பித்து ஒரு மாத காலத்துக்கான மது பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளலாம். குஜராத்தில் தங்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சில ஆவணங்களைக் காண்பித்து 'ஹெல்த்’ லைசென்ஸ் பெற்று மது அருந்தலாமாம். இப்படிச் சில சலுகைகள் தவிர, அங்கே குடிக்கு தடைதான். ஆனால், சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது நடப்பதும், அதைக் கண்டுபிடித்து தண்டிப்பதும் நடக்கத்தான் செய்கிறது. 'நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்குக் கடனாகவும் வழங்குகிறது. பூரண மதுவிலக்கு அமலில் இருக்கையில் இது எப்படி சாத்தியம்?’ என்பது எல்லோருக்கும் ஒரு முன்மாதிரிப் பாடம்தானே!''



''நம் முதல்வருக்கு நன்கு நெருக்கமானவர்தானே குஜராத் முதல்வர்?''

''குஜராத் நிர்வாகம் மிக ஒழுங்குடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதே இதற்கு மிகமுக்கியமான காரணம். மக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் முறைகேடான பண வசூலின்றி, குறித்த காலத்துக்குள் மாநில நிர்வாகம் செய்து கொடுப்பதால் மக்களும் அத்தனை வரிகளையும் முறையாக செலுத்தி விடுகிறார்கள். விற்பனை வரியில் ஆரம்பித்து அனைத்து ரக வரி வசூலும் துல்லியமாக நடைபெற்று அரசின் கஜானா நிரப்பப்படுகிறதாம். இலவசம் என்பதே மாநிலத்தின் நிர்வாகக் கொள்கையில் கிடையாதாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடையாது. ஆனால் விவசாயத்துக்குப் பயன்படும் மின்சாரத்துக்கான கட்டணம் மற்ற பயன்பாட்டுக் கட்டணங்களில் இருந்து ஒரு ரூபாய் குறைவு... இப்படி நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன!''



''முதல்வரின் கனவு எப்போது நனவு ஆகுமாம்?''

''கிடைக்கும் உற்சாகத் தகவல்களை வைத்துத்தான் நல்ல நாள் பார்க்கப்படும். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் அது நடைமுறைக்கு வரலாம். ஒரு வேளை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அறிவிப்பாகக்கூட வரலாம். மாதங்கள் கடந்தாலும் முதல்வரின் யோசனை மதுபானக் கடைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக நிச்சயமாக இருக்கும்!'' என்றபடி அடுத்த சப்ஜெட் மாறினார் கழுகார்!



ஜூனியர் விகடன் - ஆகஸ்ட் 1 , 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.